தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்க ஏற்பாடுகள் தீவிரம்?

டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுப்பது குறித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் ஆலோசித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரியில் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவையில் அவர் நம்பிக்கை வாக்கு கோரினார். அப்போது, அரசுத் தரப்பில் அதிமுக எம்.எல்.ஏ.-க்களுக்கு கொறடா உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.-க்களைத் தவிர்த்து அனைவரும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு அளித்தனர்.   இன்னும் தொடர்கிறது: எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கக் கோரி அப்போது அரசு கொறடா பிறப்பித்த உத்தரவு இப்போதும் தொடர்கிறது என்கிறார்கள் பேரவைச் செயலக வட்டாரத்தினர். இதனிடையே, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நீக்க வேண்டுமென ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர். இது, அரசு கொறடா ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது எனவும், இதன் மீது உரிய விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் 19 எம்.எல்.ஏ.-க்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸýக்கு அவர்கள் உரிய விளக்கங்களை அளிக்கவில்லை என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   நீக்கம் உறுதியா?: போதிய ஆவணங்களைத் தருவதுடன், கர்நாடக போலீஸ் பாதுகாப்பு அளித்தால் மட்டுமே உரிய பதிலை அளிப்போம் என்று டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை பேரவைச் செயலகம் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொறடா உத்தரவை மீறியதாகவும், உரிய காலக்கெடுவுக்குள் பதில்களை அளிக்காத காரணத்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை வெளியாகக் கூடும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Category: